துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வர்த்தகர் ஜெயராஜ் 58. இவரது மகன் பென்னிக்ஸ் 31. இருவரும் அலைபேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கில் கடையை ஜெயராஜ் அரசு அனுமதித்த நேரத்தைவிட தாமதமாக மூடியதாக கூறி அவரையும், மகனையும் போலீசார் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று தாக்கியதில் இருவரும் இறந்தனர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எஸ்.ஐ., பால்துரை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே அவரை வழக்கிலிருந்து விடுவித்த நிலையில், எஞ்சிய 9 பேரும் மதுரை சிறையில் உள்ளனர்.சி.பி.ஐ., விசாரித்த இவ்வழக்கில் கடந்த மார்ச் 23ல் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ‘9 பேரும் குற்றவாளிகள்’ என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்ய 2 நாள் அவகாசம் கேட்டார்.இதனையடுத்து நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து தீர்ப்பு அறிவிப்பதை ஏப்.,2ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் மத்திய மாநில அரசுகள் கட்டாயமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை வந்தால் தான் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க முடியும் என்றார்.
குற்றவாளிகளுக்கு இன்று என்ன தண்டனை என்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் உச்சபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.
இந்நிலையில் தண்டனைமீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வரும் திங்களன்று தண்டனை அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

