நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பாக்யா ராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. இதற்கு காரணமாக சட்ட கோரிக்கைக்கு ஏற்ப கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பெருநகர காவல்துறை கோரிக்கை வைத்ததின் காரணமாக சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீமான் மே 17 இயக்க நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை முடக்க எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
எனவே விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்பு படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . இவ்வாறு தவறான தகவல் பரப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது