பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த காட்டுராஜா (55) ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியராக (பொ) பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தவறான அர்த்தத்தில் பேசுவதுடன், உடலை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோரிடம் கூறினர். அவர்கள், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நேற்று மாலை பள்ளிக்கு வந்த பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ராஜுவ்காந்தி தலைமையிலான குழுவினர் மற்றும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) இந்திரா ஆகியோர் காட்டுராஜாவிடம் விசாரித்தனர். மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
