Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை!

50%க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி – உயர்கல்விக்கு ஆபத்தா?.ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் பல்கலைக்கழகங்கள்… தரவரிசை மற்றும் ஆராய்ச்சிக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்!.தமிழகம் உயர்கல்வியில் முன்னணி மாநிலமாக கருதப்பட்டாலும், தற்போது மாநில பல்கலைக்கழகங்களில் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநில உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்த பேராசிரியர் பணியிடங்களில் 67.6 சதவீதம் காலியாக உள்ளன. உதவி பேராசிரியர் பணியிடங்களில் 67.9 சதவீதமும், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 85 சதவீதமும் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் பல பேராசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதால் நிலைமை இன்னும் மோசமடையும் அபாயம் இருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு அனுமதிக்கப்பட்ட 50 பேராசிரியர் பணியிடங்களில் வெறும் 2 பேர் மட்டுமே பணியாற்றி வருவதால், 96 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆராய்ச்சி வழிகாட்டுதல், முனைவர் பட்ட ஆய்வுகள் மற்றும் கல்வி நிர்வாகம் போன்ற முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 92.9 சதவீத பேராசிரியர் பணியிடங்களும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 74.4 சதவீத உதவி பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாநிலத்தின் முக்கிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திலும் 34.1 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மூத்த பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் நிலைகளில் அதிகளவு காலியிடங்கள் காணப்படுகின்றன.

பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, மாநிலத்தின் 15 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகளில் தமிழக பல்கலைக்கழகங்கள் பின்னடைவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் தற்போது தற்காலிக மற்றும் விருந்தினர் ஆசிரியர்களை நம்பி செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், நிரந்தர பேராசிரியர்கள் இல்லாதது கல்வித் தரம், ஆராய்ச்சி முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் கல்வி அனுபவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உயர்கல்வித் துறையின் தரத்தை பாதுகாக்க காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழகத்தின் உயர்கல்வி அமைப்பு நாட்டிலேயே சிறந்ததாக கருதப்படும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்துள்ளது.

error: Content is protected !!