கடலூர்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. சினிமா பார்த்துக்கிட்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகிட்டு சீன்ஓட்டறது கிடையாது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம். இன்று வரை காவிரியில் தண்ணீர் விடவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு அழுத்தமாக தெரிவிக்கின்றனர். நமது அரசு என்ன செய்கிறது. தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. ஜூலை மாதம் முடியும் தருவாயில் இதுவரை மழை கிடையாது. விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் தமிழகம் நன்றாக இருக்கும்.
எனவே இந்த பஞ்சம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் இருந்து காக்க வேண்டியது அரசின் கடமை. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து வருகிறது. காவல்துறையை பாதுகாக்கத் தான் போட்டு உள்ளோம், அடித்துக் கொல்வதற்காக இல்லை. ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். ஆட்சி மாறியும், எவ்வித புதிய மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
