கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களைத் துரத்திச் சென்ற போது, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை நீதிமன்றம், கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் எஸ். பூமிநாதன்,
இவர், ஆடு திருடர்களை விரட்டிச் சென்றபோது அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், கொலையில் தொடர்புடையவர்கள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (19), அவரது உறவினர்களான புதுகையைச் சேர்ந்த 5, 9ம் வகுப்பு பயிலும் சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து டூவீலர் மற்றும் அரிவாளையும் போலீசார் கைப்பற்றினர்.
திருச்சி மாவட்டம், பூலாங்குடி காலனி பகுதியில் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன், தலைமைக் காவலர் சித்திரவேலு ஆகிய இருவரும் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆடுகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தியபோது, அவர்கள் தப்பியோடினர். உடனே அவர்களை பூமிநாதன், சித்திரவேல் ஆகிய இருவரும் விரட்டிச் சென்றனர் இதில், சித்திரவேல் வழித்தவறிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சூரியூர், சின்னபாண்டூரார் பட்டி, லட்சுமணம்பட்டி வழியாக கீரனூர் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாலம் அருகே மூவரையும் பூமிநாதன் மடக்கிப் பிடித்தார். மேலும், சிறுவர்கள் வந்த வாகனத்தில் இருந்த அரிவாளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார். அப்போது, இளம் சிறுவனின் தாயைத் தனது கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த அரிவாள் தவறி கீழே விழுந்ததைக் கண்ட மணிகண்டன், அரிவாளை எடுத்து பூமிநாதனை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் ஏ. சரவண சுந்தர், குற்றவாளிகளை கைது செய்தது குறித்து சம்பவத்தின் போது கூறியிருந்தது, தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியிலிருந்து ஆடு திருடிக்கொண்டு வரும்போது. சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன், தலைமைக் காவலர் சித்திரவேல் ஆகியோர் பிடிக்க முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பிய குற்றவாளிகள் கீரனூர் அருகே சிக்கியுள்ளனர். அப்போது, சிறார்கள் உள்பட மூன்று பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மது அருந்தியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். மற்ற 2 சிறார்கள் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. தனிப்படை போலீஸார், கைப்பேசி தொடர்புகளை வைத்து, முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர் என்றார் சரவண சுந்தர்.