‘சட்டசபை தேர்தலில், மகளிர், சேவாதளம் நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்’ என, வலியுறுத்தி, சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரசார் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு, வேட்பாளர்கள் பட்டியல், டெல்லி மேலிடத்தில் தயாராகி வருகிறது.
தமிழக மகளிர் காங்கிரசுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாநிலத் தலைவர் ஹசீனா சையது, கிருஷ்ணகிரியில் போட்டியிட, வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, மாவட்டத் தலைவர் பிரியாபாரதி தலைமையில், இன்று போராட்டம் நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
அதேபோல் சேவாதளம் மாவட்டத் தலைவர் கவுரிசங்கர் தலைமையில், மாநிலத் தலைவர் விஜயனுக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என, வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட, சேவாதளம் அணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், டீசல் கேனுடன் வந்தார். அவர் தன் உடல் மீது டீசலை ஊற்றி, தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்தார்.
அதை கண்ட, தமிழக காங்கிரஸ் அமைப்பு செயலர் ராம்மோகன் ஓடி வந்து, அவரை தடுத்தார். விளம்பரத்திற்காக ஏன் விபரீத செயலில் ஈடுபடுகிறீர்கள் எனக் கூறி, அப்பெண் நிர்வாகியை கண்டித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

