லக்னோ: வாரணாசியிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இன்று காலை லக்னோ விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சரக்கு வைப்பறையில் புகை இருப்பதைக் கண்டறியும் எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், லக்னோ விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனைகளில், விமானத்தில் புகை அல்லது தீ விபத்துக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 155 பயணிகளுடன் சென்ற IX 1253 என்ற அந்த விமானம், காலை 8 மணி அளவில் வாரணாசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சரக்கு வைப்பறையில் புகை இருப்பதைக் கண்டறியும் எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, விமானி லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினார். அதன்பின் காலை 8:52 மணிக்கு விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் அவசரக்கால மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை அணுகினர். காலை 9:02 மணிக்குள் அனைத்து 155 பயணிகளும் விமானக் குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், ஆய்வு செய்வதற்காக அந்த விமானம் பராமரிப்புக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட சோதனைகளில் விமானத்திற்குள் புகை அல்லது தீ விபத்துக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை கண்டறியும் எச்சரிக்கை மணி எதனால் ஒலித்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினார்.
