இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்தை அறிவித்துள்ளார். 28 வயது ஸ்மிருதி, சமீபத்தில் இந்தியாவின் முதல் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றி, 434 ரன்கள் அடித்து வீரன்மை காட்டினார். அவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், IPL-யில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாகவும் பிரகாசமாகத் திகழ்கிறார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரிலும் சிறப்பாக விளையாடிய அவர், இப்போது கிரிக்கெட் தளத்தைத் தாண்டி, தனது நீண்டகால காதலரான இசையமைப்பாளர் பலாஷ் மூச்சலுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த ரீல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வீடியோவில், ஸ்மிருதி தனது அணி தோழிகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோருடன் “லகே ரஹோ முன்னா பாய்” படத்தின் “சம்ஜோ ஹோ ஹி கயா” பாடலுக்கு நடனமாடுகிறார்.
நடனத்தின் இறுதியில், ஸ்மிருதி தனது இடது கையை கேமராவின் முன் நீட்டி, விரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி உறுதிப்படுத்துகிறார். “எங்கள் பயணம் இப்போது தொடங்குகிறது” என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, ஸ்மிருதியின் அணி தோழிகளின் உற்சாகமான கொண்டாட்டத்துடன் முடிகிறது, ரசிகர்களை மகிழ்விக்கிறது
பலாஷ் மூச்சல், 29 வயது இசையமைப்பாளரும், பாடலாசிரியருமாவார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரைச் சேர்ந்த அவர், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசை அமைத்து பிரபலமானவர். அவரது சகோதரி பாலக் மூச்சல் பிரபல பாடகியாகத் திகழ்கிறார். கடந்த மாதம் பலாஷ், ஸ்மிருதியை “இந்தூரின் மருமகள்” என்று சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார், அது வதந்திகளைத் தூண்டியது. இப்போது உறுதியான அறிவிப்புடன், இருவரும் திருமணத்தை நவம்பர் 23 அன்று நடத்த திட்டமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தம்பதியினருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி, திருமண தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

