மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(55) இவரது உறவினர் தர்மராஜ். இவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கலைச்செல்வன், நேற்று மாலை மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அவரை ஏட்டு ராஜா காப்பாற்றினார். இதில் கலைச்செல்வன் படுகாயமடைந்தார். அவரை காப்பாற்றிய ஏட்டு ராஜாவுக்கும் இரு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடுக்கல் , வாங்கல் பிரச்னையில் மயிலாடுதுறை போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கலைச்செல்வன் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறியதாவது:
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கலைச்செல்வன் கடந்த மாதம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த பணத்தில் ஒரு பகுதி தொகையை திரும்ப அவர் பெற்றுவிட்டார், இது குறித்து விசாரணைக்கு இரண்டு நாட்களில் அவரை வரச் சொல்லி இருந்த நிலையில், திடீரென காவல் நிலையத்துக்கு வந்த கலைச்செல்வன் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், கலைச்செல்வன் 30 சதவீத தீக்காயங்களும் காப்பாற்ற சென்ற ராஜா 15 முதல் 20 சதவீதக் காயம் அடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக நெருப்பை பற்ற வைத்து மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக கலைச்செல்வன் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
