உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாள் அவகாசமும் அளித்தது. இதைத்தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.
அதைத்தொடர்ந்து பொன்முடி, விசாலாட்சி தரப்பில் கடந்த 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவருக்கும் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்ததுடன் வழக்கை தள்ளிவைத்தார். எனவே பொன்முடி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை சிறை செல்ல வேண்டியதில்லை.