கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் அங்கு மழை கொட்டி தீர்க்கிறது. கபினி அணையின் நீர் ஆதார பகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் 2 நாட்களாக மீண்டும் கனமழை கொட்டியது. இதனால் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இது போல கே. ஆர்.எஸ் அணைக்கம் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மேற்கண்ட 2 அணைகளில் இருந்தும் நேற்ற மாலை வெளியேற்றப்பட்டு வந்த நீரின் அளவு 84ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில் இன்று மதியம் இரு அணைகளில் இருந்தும் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.14 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வெளியேற்றதின் அளவு இன்று மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வயநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் கபினி அணைக்கு தற்போது நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்து அங்கிருந்து நீர் வெளியேற்றம் 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலைக்குள் கபினி அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் ஒரு லட்சம் கனஅடியாகவும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலைக்குள் காவிரியில் நீர் வெளியேற்றத்தின் அளவு 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால், மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 1.5 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்க தயாராக உள்ளனர். அதனால் தமிழக நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் மேட்டூரில் முகாமிட்டு உள்ளனர்.