Skip to content
Home » தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்….

தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (12.9.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Maxivision Super Speciality Eye Hospitals Private Limited), 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாடு, தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவிட ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை விரைவில் அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளுக்கு மகுடம் சூட்டும் வகையில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்திட உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தரமான கண் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமமாகும். இக்குழுமம், தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிசிக்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுமம், 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும் மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!