தமிழக சட்டசபை தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பறக்கும்படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுலா பயணிகள் வந்த காரை மறித்து சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் காரில் துப்பாக்கி இருந்ததை பறக்கும்படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பறக்கும்படை அதிகாரிகள் காரில் வந்த 4 இளைஞர்களிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
ஆனால், 4 இளைஞர்களும் உடனடியாக காரில் தப்பிச்சென்றனர். இது குறித்து பறக்கும்படையினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சுற்றுலா பயணிகள் சென்ற காரை சில்வர் கஸ்கட் பகுதியில் துரத்திப்பிடித்தனர். பின்னர், அந்த 4 இளைஞர்களை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் 4 இளைஞர்களும் கொடைக்கானல் சுற்றுலா வந்ததும் அவர்கள் அனைவரும் தென்காசி மாவட்டம் மவலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 இளைஞர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
