தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் நெய்வாசல் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன் என்பவரின் மகன் பிரதீப் (27) என்பது தெரிய வந்தது. இவர் அப்பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இபி காலனியில் உள்ள உறவினர் வீட்டில் ஏற்பட்ட துக்கத்திற்கு பிரதீப் வந்துள்ளார். பின்னர் அன்று இரவு மீண்டும் நெய்வாசலுக்கு பைக்கில் திரும்பி செல்லும் போது சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் பைக்குடன் நிலைத்தடுமாறி விழுந்துள்ளார் என்பதும் இரவு நேரம் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்தது யாருக்கும் தெரியாமல் போய் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. உறவினர் வீட்டு துக்கத்திற்கு வந்த வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.