ஈரோடு : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்ட விஜய், காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலம் செல்கிறார். காலை 11.30 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்தை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், மைதானத்தில் 58 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. 4 ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல், வெயில் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலக்குறைவுகளை கையாள இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக உள்ளன. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானம் முழுவதும் 40 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தனி கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. போலீசார், “பேரிகேடுகளை மீறி செல்ல வேண்டாம்” என்று தொண்டர்களை எச்சரித்துள்ளனர்.விஜயமங்கலம் நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் வருகை தருவதால், விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயற்சி செய்து வருகின்றனர்.விஜய்யின் இந்தப் பொதுக்கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. தவெகவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு, மருத்துவம், போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டம் அமைதியாக நடைபெறும் என நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

