ராமநாதபுரம்: எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த இரட்டை இலைச் சின்னம் தற்போது அமித்ஷாவிடம் ஒரு இலையாகவும், எடப்பாடியிடம் ஒரு இலையாகவும் உள்ளது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான நடிகர் கருணாஸ் நேற்று ராமநாதபுரத்தில் நிருபரிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது. சிவகங்கை தொகுதிக்கு என்னை வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த உடனே, தொகுதி முழுவதும் பாஸிட்டிவான அலை ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகால திட்டங்கள், சாதனைகள், தற்போதைய தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் விரும்புகின்றனர்.

