திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66). இவர் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது கழுத்திலிருந்த 6 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நகை திருட்டுப் போனது குறித்து மரியஅஞ்சலி உடனடியாகத் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டு கும்பலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், வேர்க்கிளம்பிப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இரு பெண்களைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (44), லட்சுமி (40) என்பதும், மரியஅஞ்சலியின் தங்கச் சங்கிலியைத் திருடியதும்தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை விற்கப்பட்டதில் கிடைத்த ரூ.21,000 ரொக்கப் பணத்தைத் திருவட்டார் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
