Skip to content
Home » திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்…

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இவ்வாதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு சமூக பணி சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றம் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான 10-ஆம் திருநாளான இன்று ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழா மற்றம் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள் மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாகோலம் பூண்டது.

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து, சிறப்பாக சமயப் பணியாற்றிய 6 பேருக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் 50 ஆயிரம்

ரூபாயை அருட்கொடையாக வழங்கி ஆசி வழங்கினார். பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் 10 விரல்களில் வைர மோதிரங்கள் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.

தொடர்ந்து, பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க 50 நாதஸ்வரம் தவில்வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும்; பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே மீனா தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!