விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோவிலில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில்
அன்னதானம் சாப்பிட்டவர்கள் திடீரென வாந்தி, மயக்கமடைந்தனர். இதனிடையே பாதிப்படைந்த 150 க்கும் மேற்பட்டோர் அ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரை சிகிச்சைக்காக மொத்தம் 107 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 41 பெண்கள், 55 ஆண்கள், குழந்தைகள் 11 பேர் என மொத்தம் 107 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானத்தின் உணவு, குடிநீர் அருந்தியதன் காரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நலமாக உள்ளனர்” என்றார்.