திருச்சி, அரியாவூர் அரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). புங்கனூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான சேட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் மீண்டும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விஜயலட்சுமி, கணவரை கண்டித்தார்.
இதனால் மனம் உடைந்த சேட்டு யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராம்ஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லால்குடி வர குப்பை மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (61). மதுவுக்கு அடிமையான இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
வலியால் அவதிப்பட்டு வந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தார் இது குறித்து கேகே நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துறையூர் தெற்கு ரத வீதி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன்(37). இவருக்கு திருமணம் ஆகி சுகன்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மது பழக்கத்தால் உடல் நலன் பாதிக்கப்பட்டது.
பின்னர் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட இயலாத மன உளைச்சலில் மாதவன் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது பற்றி அவரது தாயார் அதிசய மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
