பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை
திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என பழனியின் அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி அணியாய் நடந்து வந்தனர். அவ்வாறு வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியும், பாட்டு பாடியும் ஆடி வந்தனர். பழனி வந்த பின்பு சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடினர்.
குளத்தில் நீராடிய பக்தர்கள் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பழனியில் நேற்று பக்தர்கள் படையெடுத்து வந்ததால் அடிவார பகுதியே கூட்டத்தால் அலைமோதியது. எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கிரிவீதியில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம், யானைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
பின்பு அங்கிருந்து படிப்பாதை வழியாக கீழே இறங்கி சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விழாவில் 5-ம் நாளான நேற்று, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை உடன் வெள்ளி யானை வாகனத்தில் உலா வந்தார். பக்தர்கள் திரளானவர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் புகழ்பெற்ற காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் நேற்று மயில் காவடிகளை சுமந்தபடி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு முன்பாக ‘வைர வேல்’ வைக்கப்பட்ட பெட்டி மாட்டு வண்டியில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு
வரப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் இணைந்து அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.

