கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பரம்பின்தலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் நிஷா (19), கல்லூரி மாணவி. இவரும் அம்சி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மணிகண்டன் என்பவரும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நிஷா குழித்துறையில் வேறொரு வீட்டில் கணவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நிஷாந்த் வெளியூர் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது நிஷா, கணவரின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நிஷாந்த் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. உடனே நிஷா, தனது தாயிடம் தெரிவிக்க அவரும், மருமகனின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கும் அவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நிஷா, தான் விரும்பி மணந்த காதலன் தனக்கு உரிய மரியாதையை கொடுக்காமல் அலட்சியப்படுத்துகிறாரோ? என்ற எண்ணத்தில் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டார். இதையடுத்து அவர் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
