2019 ஆண்டு திருச்சி அருகே உள்ள பெல் நிறுவன கூட்டுறவு வங்கியின் ஊழியர்களுக்கு கொடுக்க வைத்திருந்த சம்பள பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் மொபைல் எண்ணை வெளியிட்டுள்ளனர்.
திருச்சி பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பெல் நிர்வாக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த கூட்டுறவு வங்கியில் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் அந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றான்.
அந்த வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் முகமூடி அணிந்த கொள்ளையன் அந்த வங்கியின் ஜன்னல் கண்ணாடியை திறந்து நேராக பெல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக
வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் அடங்கிய சூட்கேஸை எந்த வித தயக்கமும் தேடலும் இல்லாமல் நேரே சென்று எடுத்து வந்து அந்த சூட்கேஸைத் திறந்து அதிலிருந்து பண கட்டுகளை ஒரு பேக்கில் போட்டு எடுத்துக் கொண்டு தப்பிச் செல்வது போன்று அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது சம்பந்தமாக பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்ததோடு அந்த வங்கியில் வேலை பார்த்து வருபவர்கள் மற்றும் சந்தேகப்படுபவர்களையும் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது
இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாமல் இருந்ததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிபிசி போலீசார் அதனை தற்போது நவீன யுக்தியுடன் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையடிக்கும் காட்சி தெளிவாக தெரியும் படியும் எளிதாகறி உள்ளனர். அந்த வீடியோவை கடந்த நான்கு நாட்களுக்கு முன் சிபிசிஐடி போலீசார் பெல் ஊழியர்கள், பாதுகாவலர்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கு 9659883888 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெல் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கொள்ளையன் விரைவில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.