தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.., திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். நடைபாதை மற்றும் சாலையோர கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபாதை கடைகளுக்கென பிரத்தியேகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் கடைகளை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் வியாபாரம் செய்துகொள்வதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. எனினும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரதோப்பு, தேரடிக்கடை வீதி, பெரியகடை வீதி, நந்தி கோவில் தெரு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் சாலையோர’ வியாபாரிகளுக்கென கடைகள் ஒதுக்கீடு செய்திடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். என கூறப்பட்டுள்ளது.