ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று 4வது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை, மற்றம் வெளிமாநிலங்களிலும் சேர்த்து சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் பெண் அதிகாரி மஞ்சுளா உட்பட நான்கு வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று 4வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நிலம் வாங்கியவர்களிடம் ஆவணங்களை கொண்டு வர சொல்லி அரசு நிர்ணயித்துள்ள நிலத்தின் மதிப்பு எவ்வளவு, நீங்கள் என்ன விலைக்கு நிலத்தை வாங்கினீர்கள். அதற்கான பணத்தை எப்படி செலுத்தினீர்கள் என அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் நிலம் வாங்கியவர்கள் சுமார் 10 பேர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் ஒரிஜினல் பத்திரம் கொண்டு வர சொல்லி விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.