திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரைப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் தாலுகா, வயலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அக்பர் அலி (49) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 35 லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரூ. 2,250 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி காட்டுப்புத்தூர் அருகே எம்.புதூர் பகுதியில் உள்ள ஒரு முள் புதர் மறைவில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26), சசிகுமார் (51), பிரபு (26) மற்றும் தொட்டியத்தைச் சேர்ந்த சீனிவாசன் (41) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 4 கட்டு சீட்டுகள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ. 3,020 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சசிகுமார் மீது ஏற்கனவே ஒரு சூதாட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
