திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற முத்தழிழ் குமரன் (36), கருமண்டபம் ஆல்பா நகரை சேர்ந்த கார்த்திக் (31) மற்றும் கருமண்டபம் அருகேயுள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த அர்ஜூன் என்கிற காட்டுப்பூச்சி (27) மற்றும் கோபால் (30).
இவர்களில் கோபால் தவிர மற்ற மூவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குமரன் மற்றும் அர்ஜூன் ஆகியோர் கல்லுகுழியில் இருக்கும் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவரிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து அவரை தாக்கி அவரது கைப்பேசியை பறித்துக்கொண்டு சென்றனர்.
கைப்பேசியை பறிகொடுத்தவர் ராபின் சாம்சனுக்கும் நண்பர் என்பதால், சம்பவம் குறித்து சாம்சனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சாம்சன் இதுகுறித்து குமரனிடம் விசாரித்ததுடன், அவரது கைப்பேசியை திரும்பத்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் தரமறுத்ததுடன், சாம்சனையும் திட்டியுள்ளார். பின்னர் ஜெயில் கார்னர் பகுதியில் நின்று கொண்டிருந்த சாம்சனை அங்கு வந்த, குமரன், கார்த்திக், அர்ஜூன், கோபால் ஆகியோர் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த சாம்சன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து நால்வரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் அவர்களை அழைத்து சென்றனர். அப்போது, முத்தமிழ் குமரன், கார்த்திக் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடினர். போலீசார் விரட்டிச்சென்றபோது இருவரும் தடுமாறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இருவரையும் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து ரௌவுடிகள் இருவரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.