ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி விஏஓ கருப்புசாமி (58) தொடர்பு கொண்டுள்ளார். அப்போது என்னிடம் வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேன் என கூறி மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார்.
தொடர்ந்து மனுதாரரின் மொபைல் எண்ணுக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்ததாக அழைத்துள்ளார். பின்னர் நான் பரிந்துரை செய்ததால் தான் உங்க அம்மா பெயரில் பட்டா கிடைத்தது. ஆகையால் எனக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறியதற்கு, ரூ. 2 ஆயிரத்தை கழித்து , ரூ. 13 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுத்தலின் படி, ரசாயனம் தடவிய பணம் ரூ.13000 கருப்புசாமியிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட விஏஓவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

