சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து வைக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் தேவையை முன்னிட்டு இந்த நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று (செப்டம்பர் 7, 2026) காலை 6 மணி முதல் 12,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நீர்வரத்து நேற்று மாலை 9,709 கன அடியாக இருந்த நிலையில் வினாடிக்கு 9,512 கன அடியாக சற்று குறைந்துள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதாலும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராத காரணத்தாலும் நீர் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து இன்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் அணை மின் நிலையம் சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணைகளில் மின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதாக நீர் மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
