சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து, அந்த அணையின் பாதுகாப்பு கருதி, காவிரியில் திறக்கப்பட்ட 27,000 கனஅடி உபரிநீர் நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வந்தது. தற்போது நீர்வரத்து 19,000 கனஅடியாக உள்ள நிலையில், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், காவிரியில் குளிக்க, பரிசல் இயக்க நேற்று காலை முதல் தடை விதிக்கப்பட்டது.
அதேசமயம் நேற்றிரவு இரவு 8 மணியளவில் கபினி நீர் மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு; நீர் இருப்பு 35.244 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
