கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுதலாக உள்ள காட்டுப் பன்றிகள் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து அழிக்கின்றது. இதற்காக காட்டுப் பன்றி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வன எல்லை பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் வரை தென்படும் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வன எல்லைக்குள் கொண்டு விடுவது, 3 கிலோ மீட்டர் அப்பால் தாண்டி வரும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்வது என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் இரவு நேரத்தில் வேளாண் பயிருக்கு சேதம் விளைவித்த காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் அங்க பெரிய அளவிலான கூண்டு ஒன்று வைத்தனர். பின்னர் 2 நாளில் 2 பெரிய பெண் காட்டு பன்றிகளும், 5 குட்டி காட்டு பன்றிகளும் கூண்டில் சிக்கியது. அவை மற்றொரு கூண்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டு பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி ரிசர்வ் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் தடுக்கப்பட்டு உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.