மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி(62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிபார்ப்பதற்காக இந்தியா வந்தார். மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் அமர்ந்திருந்த விசாலாட்சிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து விமான நிலையத்தில் இருந்த மருத்துவக்குழுவினர் விமானத்தில் ஏறி அவரை பரிசோதித்தனர். அப்போது விசாலாட்சிக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவும், படபடப்பாகவும் இருப்பதால் அவரால் பயணிக்க முடியாது என்று டாக்டர் தெரிவித்தார். மேலும் அவருக்கு முதலுதவி அளித்தபின்னர் விசாலாட்சியை விமானத்தில் இருந்து இறக்கி மருத்துவ சிகிச்சைக்காக இரவு 10:40 மணிக்கு விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் கண்ட்டோன்மென்ட்டில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
