ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) இருந்தார். இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வேலைக்கு வந்த ரூபா மாலையில் வழக்கம் போல வீட்டுக்கு கிளம்பினார். ஆனால் இரவு வரை வீடு போய் சேரவில்லை. போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கணவர் மற்றும் மகன் ரூபாவை தேடத்தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று காலை கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் ரூபா கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலை நசுங்கிய நிலையில்,அரை நிர்வாணத்துடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த வழக்கில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்ததில் சந்தேகத்தின் அடிப்படையில், கணவன் மனைவியான கதிர்வேல் – நித்யா ஆகிய இருவரை பிடித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறப்பிற்கு முன் ரூபா அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூபா வேலைக்கு வரும் பஸ்சில் அவருடன் வழக்கமாக வரும் நபர்கள் சிலரிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிகிறது.