திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (19) என்பது தெரியவந்தது. அவர் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து காளிமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் சலைன் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு இந்தப் போதை பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

