தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102
வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, அமைச்சர், முதலமைச்சர், தமிழ்ப்போராளி, பெண்ணடிமை தீர்க்க வந்த சீர்திருத்தவாதி, இன்னும் எத்தனையோ பட்டங்களுக்கும், அடைமொழிகளுக்கும் சொந்தக்காரர்.
யார் அவர் ? என்று அறியத்தோன்றத்தான் செய்யும். அவர்தான் ஓய்வறியா உழைப்பாளி, முத்தமிழ் அறிஞர் என இந்திய திருநாடே அன்போடு அழைக்கும் கலைஞர் கருணாநிதி.
அவருக்கு இன்று 102வது பிறந்தநாள்.
எல்லோரும் பிறக்கிறார்கள், மறைகிறார்கள். இது இயற்கையின் நியதி. ஆனால் வாழ்ந்த காலத்தில் இந்த சமூகத்திற்கு என்ன செய்தார்கள் என்பதில் தான் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது.
கலைஞா் ஒன்றும் செல்வ சீமான் குடியில் பிறக்கவில்லை. சாதாரண சாமான்ய ஒரு நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்தார். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், அதாவது……..இன்றைய நாகை மாவட்டம் திருக்குவளையில், முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாக 1924ம்ஆண்டு ஜூன் மாம் 3ம் தேதி பிறந்தார்.
அவர் பிறந்த ஊரின் பெயர் திருக்குவளை, சங்க இலக்கியங்களில் குவளை மலர்கள் என்ற வார்த்தைகளை பார்க்க முடிகிறது. பெற்றோரின் பெயரோ தூயத் தமிழ் பெயர்கள். எனவே தமிழ் இயற்கையாகவே கலைஞருடன் கலந்திருந்தது. இது இயற்கை அவருக்கு கொடுத்த கொடை.
பள்ளி இறுதி வகுப்பு வரை தான் படித்தார். அப்போதே அவர் கைப்பிரதி ஏடு நடத்தினார், 14 வயதிலேயே திருவாரூர் வீதிகளில் தமிழ்க்கொடி ஏந்தி ….இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்……. அந்த பழமொழிக்கு ஏற்ப மாணவப்பருவத்திலேயே தமிழ் உணர்வு மிக்க மாணவனாக மட்டுமல்ல, தமிழ்ப்போராளியாகவும் இருந்தார்.
இளங்கன்று பயமறியாது என்பார்கள். காலப்போக்கில் பலர் தன்நிலையை மாற்றிக்கொண்டு பத்தோடு பதினொன்றாய் போவார்கள். ஆனால் திருவாரூரில் கலைஞரின் உள்ளத்தில் ஏற்றப்பட்ட கனல் இறுதிவரை அணையாமல் சுடர் விட்டு எரிந்தது என்பது தான் உண்மை.
அவர் சில காலங்கள் பதவியை இழந்திருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும் அவர் தமிழ் போராளி என்ற நிலையை மட்டும் மாற்றியதில்லை. இழந்ததில்லை.
நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட கலைஞர் தனது 14வது வயதிலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது நாட்டங்கொண்டார்.
17 வயதில் நாடகம் எழுதினார், 23 வயதிலேயே சினிமா கதாசிரியர், பாடலாசிரியர், திரைக்கதை, வசனகர்த்தா என திரைத்துறையில் கோலோச்சத் தொடங்கினார்.
பராசக்தி , மந்திரி குமாரி, மனோகரா, என 73 திரைப்படங்களுக்கு கதை வசனம் தீட்டி இருக்கிறார். பராசக்தி திரைப்படம் 1952ல் வெளியானது. சுமார் 73 வருடங்கள் ஆனபோதும் இன்றும் பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் தமிழ்த்திரை உலகத்தை ஆட்சி செய்து கொண்டு தான் இருக்கிறது.
அனல் தெறிக்கும் வசனம் என்பார்கள். உண்மையிலேயே கலைஞர் எழுதிய வசனங்கள் மூடநம்பிக்கைகள் மீது, எரிமலை போல் அக்னி குழம்பை அள்ளி வீசியது. இன்றும் அந்த வசனங்கள் அதே சூட்டோடுதான் இருக்கிறது. அவரது வசனங்கள் காலத்தால் அழிக்கமுடியாதவை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் தான்.
பராசக்தி படத்தில் பாடலும் எழுதினார். அப்போது அவருக்கு வயது 28 தான். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக முதலில் தோன்றிய படம் ராஜகுமாரி. அதற்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர் தான். அதுபோல சிவாஜியின் முதல்படமான பராசக்திக்கும் வசனம் எழுதியவர் கலைஞர். இப்படி சினிமா உலகை ஆட்டிப்படைத்த இரு ஜாம்பவான்களையும் தனது வசனத்தின் மூலம் தூக்கி நிறுத்தியவர் கலைஞர்.
1942ல் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஆகியோரை அழைத்து முரசொலி ஆண்டு விழாவை நடத்தினார்.அதன் பிறகு 1946ல் அண்ணாவை சந்திக்கிறார் கலைஞர் கருணாநிதி. இப்படியாக கலைஞர் கருணாநிதி, திராவிடர் கழகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். பின்னர் பேரறிஞா் அண்ணா அவர்கள்……… திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கியபோது கருணாநிதியும் அதில் முக்கிய பங்காற்றினார்.
கலைஞர் கருணாநிதி 5 முறை தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்றார் என்றால், அது அவருக்கு தானாக வந்துவிடவில்லை. அவரது உழைப்பு, போராட்டம் அதற்கு அடித்தளமிட்டது. கருணாநிதி நடத்திய போராட்டங்களில் முக்கியமானது என்றால் அது 1953ல் நடத்தப்பட்ட கல்லக்குடி போராட்டம் தான். ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து, தமிழ்மொழி காத்தார்.
1957 அக்டோபர் 13-ம் நாள், இந்தி எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது. அதற்குத் தலைமையேற்ற கலைஞர், சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தியதால் நான்கு மாதங்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1965-ம் ஆண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கலைஞர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். 62 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு கலைஞர் விடுதலை செய்யப்பட்டார்.
“என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில்கிடக்கும் பாளையங்கோட்டை தான் இனி நான் யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி” என்று அறிஞர் அண்ணா சொன்னார்!….. என்றால் கருணாநிதி மீது அண்ணா எத்தகைய அன்பு கொண்டிருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த போராட்டங்கள் மூலம் அண்ணாவின் மனதில் நீங்கா இடம் பிடித்த கருணாநிதி 1957 சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2016 வரை 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி நாயகனாக முடிசூட்டப்பட்டார். தமிழ்நாட்டின் ஆளுமைகள் எல்லாம் ஏதோ ஒரு தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆனால் தோல்வி அறியா நாயகனாக 13 தேர்தல்களிலும் முடிசூட்டப்பட்டவர் கலைஞர்.
5 முறை முதல்வராக இருந்தோம்…… காலத்தை ஓட்டினோம் என்று இல்லாமல், தன்னை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறையும் அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அவை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருந்தது. புதுமைகளும், புரட்சித்திட்டங்களும் தமிழகத்தில் இருந்து தான் புறப்பட்டிருக்கிறது கலைஞர் காலத்தில்.
அண்ணாவின் மறைவுக்கு பின்னர் 1969ல் முதன்முறையாக தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றார் கருணாநிதி. அப்போதெல்லாம், தமிழ்நாட்டில் கைரிக்ஷாக்கள் அதிகம். அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கைரிக்ஷா தான் பெரிய போக்குவரத்தாக இருந்தது.
மனிதனை மனிதனே இழுப்பதா?, என எண்ணிய கருணாநிதி கைரிக்ஷாக்களை ஒழித்து, அனைவருக்கு சைக்கிள் ரிக்ஷாக்களை இலவசமாக வழங்கினார்.
இந்தியாவுக்கே முன்னோடியாக குடிசை மாற்றுவாரியத்தை உருகாக்கி, குடிசைகளில் வாழ்ந்த மக்களை கோபுரத்தில் குடியேற்றினார் கருணாநிதி. அதாவது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார் கருணாநிதி.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரு தேசிய திருநாட்களிலும், மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தனா். சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களே கொடியேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டு அந்த உரிமையை இந்தியா முழுமைக்கும் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. சுதந்திர தின வெள்ளிவிழாவான 1972ம் ஆண்டு முதல் மாநில முதல்வர்களே தேசிய கொடி ஏற்றி வருகிறார்கள். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே கலைஞர் பெற்றுத்தந்த உரிமை.
ஆனால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் மற்ற மாநில முதல்வர்கள் இதை நினைத்து பார்ப்பார்களா என்று தெரியவில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டுக்கு தந்தவர் கலைஞர். பார்வையற்றோருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்கான இல்லங்கள், விவசாயத்திற்காக இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக முதன் முதலாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் ஏற்படுத்தினார்,
அமைச்சரவையில் பிற்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உயர்கல்வி வரை இலவச கல்வி, கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள், விதவைகள் மறுவாழ்வு திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்,
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு, 69 சதவீத இட ஒதுக்கீடு, அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு,
எத்துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள் என்பதை காட்ட…. 1973ல் தமிழகத்தில் பெண் போலீஸ் துறையை உருவாக்கினார் கலைஞர்.
பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்கவேண்டும் என கருதி 1989ல் முதன் முதலாக தமிழகத்தில் மகளிர் சுய உதவிகுழுக்களை தொடங்கினார். ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி, அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார்.
மெட்ராஸ் என்னும் வார்த்தையை தமிழ்ப்படுத்தி மெட்ராசை சென்னையாக்கினார். சாதி பேதங்களை ஒழிக்க தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சமத்துவபுரங்களை தந்தார். உழைக்கும் விவசாயி அதன் பலனை பெற வேண்டும் என கருதி தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் , இந்தியாவுக்கே எடுத்து காட்டாக மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்,
ரேஷனில் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு கொடுத்தது என கருணாநிதியின் ஆட்சி காலம் முழுவதும் திட்டங்கள்…. சாதனை திட்டங்கள்….. மற்ற மாநிலங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திட்டங்கள் என ஒவ்வொரு நாளும் ஒரு திட்டம் என தந்து, தன் வாழ்நாளெல்லாம் தமிழகத்திற்காக உழைத்த அந்த ஓய்வறியா உழைப்பாளியாம் கலைஞருக்கு இன்று வயது 102.
அவர் ஒரு பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, முதலமைச்சர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பாடம்….
மாணவர்ளுக்கான பாடம் மட்டுமல்ல, மானுட இனத்திற்கே அவர் ஒரு பாடம். அவரை பெற்ற தால் தமிழகம் இன்றும் உயர்ந்து நிற்கிறது.
உறவுக்கு கை கொடுத்தார்…… உரிமைக்கு குரல் கொடுத்தார்…. தமிழ் உலகை வாழவைத்தார். அவரது புகழ் ….. தமிழ் உள்ளவரை வாழும். அவரது பிறந்தநாளில் நாமும் அவரை வாழ்த்துவோம்.