மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சிவனார்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி(48) நுரையீரல் பாதிப்பு காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்தார். மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் கூறுகையில், காச நோயால் அமராவதியின் நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 7 நிமிடத்தில் மின்தடை சரி செய்யப்பட்டதாகவும் கூறினார். அமராவதி போன்று வென்டிலேட்டர் வைக்கப்பட்ட 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டீன் ஒரு குழு அமைத்துள்ளார்.
இறந்து போன அமராவதி துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் மாரிமுத்து ஏற்கனவே இறந்து விட்டார்.