குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சாட்சியங்களை மறைத்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர்கள் பிரேமச்சந்திரன், அருணாசலம், எஸ்.ஐ. கண்ணன் ஆகியோரை வழக்கில் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேமச்சந்திரன், கண்ணன் இருவரும் பணி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது பணியில் உள்ள ஆய்வாளர் அருணாசலத்தை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவனின் பிரேத பரிசோதனையில் காயங்களை மறைத்து அறிக்கை அளித்த அரசு மருத்துவர் ஜெயக்குமார், மருத்துமனை அலுவலர் ஸ்ரீலதா மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.