உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் சுபோத் குமார் வர்மா என்ற இளைஞரும் ஒருவர். வெளியே வந்த அவர் மகிழ்ச்சியால் ஆனந்த கூத்தாடினார். உடல் சோர்வாக இருந்தபோதும், அவர் உள்ளத்தால் துள்ளிக்குதித்தார். அவர் சுரங்கபாதைக்குள் சிக்கியது மற்றும் மீண்டது குறித்து கூறியதாவது:
“முதல் 24 மணி நேரம் மிகக் கடுமையாக இருந்தது. உயிருடன் தப்பி வருவோமா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் மிகவும் கவலையடைந்தேன். 41 பேர் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம்.
அதன்பின் குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது, அது எங்களுக்கு சற்று நம்பிக்கை அளித்தது. ஆனாலும் எப்போது வெளியே செல்லுவோம் என்ற எண்ணம் தான் எங்களுக்கு இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் நாங்கள் வெளியே வந்தது இறைவன் அருள் தான்.
தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். எனது உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது. பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய “எலி வளை” தொழிலாளர்கள் எங்கள் 41 பேரையும் பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பண உதவி நிதி வழங்கப்படும். சில்க்யாரா சுரங்கப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்