Skip to content
Home » ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

  • by Senthil

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

டில்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் வந்திருந்தனர். இரு பிரதமர்களும் போட்டியை அரை மணித்திற்கு மேலாக கண்டுகளித்தனர்.

நேற்று ஆட்ட நேர இறுதியில்ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.  ஆஸ்திரேலிய வீரர்கள் ஹெட்(32), லபுஷேன்(3), சுமித்(38), கோம்ப்(17) ஆகியோர் அவுட் ஆனார்கள்.  ஷமிக்கு 2 விக்கெட்டுகளம், அஸ்வின், ஜடேஜாவுக்கு தலா ஒரு விக்கெட்டும் கிடைத்திருந்தது.

நேற்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 104 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். அவருடன்  கேமரூன் கிரீனும்(49) ஆடிக்கொண்டிருந்தார். இன்று காலை அவர்கள் 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். காலை 11 மணி அளவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 134, கிரீன் 71 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தனர். நங்கூரம் பாய்ச்சியது போன்ற இருவரும் நிலைத்து நின்று ஆடுவதால்,  ஆஸ்திரேலியா தற்போதைய நிலவரப்படி வலுவாகவே உள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!