Skip to content

4வது டெஸ்ட்: டிராவுக்கு இந்தியாவை தாஜா செய்த ஸ்டோக்ஸ், மைதானத்தில் நடந்தது என்ன?

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 5 தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து 2-1 என்ற புள்ளிகணக்கில் முன்னிலையில் உள்ளது.  இந்த நிலையில் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் 4வது டெஸ்ட் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை நெருக்கடியுடன் எதிர்கொண்டது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.

ராகுல் 90 ரன்கள் எடுத்தும், கில் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் 5-வது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும்  யாரும் எதிர்பாராத பலமான  கூட்டணி அமைத்தனர். இருவரும்  பார்ட்னர்ஷிப்பில் 203 ரன்கள்  எடுத்தனர

கடைசி செஷனில் 15 ஓவர்கள் எஞ்சியிருந்தது. ஜடேஜா 90 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 84 ரன்களிலும் தங்களது சதத்தை நெருங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களிடம் பென் ஸ்டோக்ஸ் பேசினார். ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என ஹேண்ட் ஷேக் கொடுக்க முன்வந்தார். ஆனால், அதை இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்.ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு விதி 12.7.6 பிரிவின் கீழ் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில் ஆட்டத்தில் எந்த அணிக்கும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையென்றால் இரு அணி கேப்டன்களும் பேசி ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’. இதை கடைசி ஒரு மணி நேர ஆட்டம் தொடங்கும்போதோ அல்லது கடைசி 15 ஓவர்கள் வீசப்படும் போதோ செய்யலாம். இதற்கு பரஸ்பரம் இரு அணிகளின் கேப்டன்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். பேட்டிங் செய்யும் அணியின் தரப்பில் களத்தில் உள்ள வீரர்கள் அந்த முடிவை எடுக்கலாம்.

ஆட்டத்தை முடித்துக்கொள்ள மறுத்த நிலையில், ஜடேஜா உடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பேசி இருந்தனர். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.“நீங்கள் சதம் விளாச வேண்டுமென்றால் இதுபோல முன்னதாகவே பேட் செய்திருக்க வேண்டும்’ என இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்தனர். அப்போது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இருவரும் பவுண்டரிகளில் ரன் ஸ்கோர் செய்து கொண்டிருந்தனர்.

ஸ்டோக்ஸ்: ஜட்டு… நீங்கள் ஹாரி புரூக் மற்றும் பென் டக்கெட் பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட் சதம் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?

ஜடேஜா: நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்? வாக்-ஆஃப் கொடுத்துவிட்டு சென்றுவிடவா?

ஸாக் கிராவ்லி: ‘ஜட்டு… ஹேண்ட் ஷேக் செய்து கொள்ளலாம்’

ஜடேஜா: ‘என்னால் எதுவும் செய்ய முடியாது” என அந்த உரையாடல் இருந்தது.

இதன் பின்னர் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் சதம் விளாசினர். அதன் பின்னர் ஆட்டம் டிரா ஆனது. அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸின் ஹேண்ட் ஷேக் விவகாரம் சமூக வலைதளத்தில் விவாத பொருளாகி உள்ளது. ஸ்டோக்ஸ்  பேச்சை கேட்டு  ஜடேஜா, வாஷிங்டன்  டிரா செய்திருந்தால்  இருவருக்கும் சதம் வாய்ப்பு நழுவி போய் இருக்கும். ஏற்கனவே 2021ல் வாஷிங்டன் இங்கிலாந்துக்கு எதிராக  ஒரு  சதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் இப்போது அவர் 2வது டெஸ்ட்  சதம் அடித்து உள்ளார்.

ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டோக்ஸ் சொன்னது என்ன? – “இந்திய அணி மிக கடுமையாக செயல்பட்டது. ஆட்டத்தில் ஒரே ஒரு முடிவுக்கு மட்டும் தான் வாய்ப்பு இருந்தது. எனது பவுலர்களை வைத்து ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. டாவ்சன் அதிக ஓவர்கள் வீசி களைப்பில் இருந்தார். எனது முன்னணி பவுலர்களை வீச வைக்கவும் நான் விரும்பவில்லை” என ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

4வது  டெஸ்ட்  டிரா ஆனது. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் உள்ளது.  வரும் 31ம் தேதி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இதில்  இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் டிரா ஆகும். இல்லாவிட்டால் இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும்.

 

error: Content is protected !!