கரூரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐந்து வங்கதேச நாட்டினருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த 5 நபர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 25.09.2024 அன்று வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிமுல் உசேன், அஜ்மீர் மாமுன், ஜமீருல், சாகூர் என்கிற சைபூர் மற்றும் ஆஷிக் ஹசார் ஆகிய 5 பேரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 2-ல் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில்,உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 5 வங்கதேச நாட்டினருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் தண்டனைக் காலம் முடிந்தவுடன், அவர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
