மதுரை தனக்கன்குளம் அருகேயுள்ள மொட்டமலை பகுதியில் கடந்த 22-ம் தேதி முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (27) என்பவர் 3 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடினர்.இந்நிலையில், காளீஸ்வரன் கொலையில் தொடர்புடைய மதுரை சுள்ளான் பாண்டி, மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய இவர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஆனால் அவரைக் கைது செய்யாமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக, மதுரை கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சுள்ளான்பாண்டி கைது செய்யப்பட்டிருந்தால் காளீஸ்வரன் கொலை நடந்திருக்காது என கூறப்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து, மதுரை போலீஸ் கமிஷனர் கநாதன் நேற்று உத்தரவிட்டார்.
