கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில், கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் வருகை தந்துள்ளார். இதையடுத்து கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரேமலதா விஜயகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கட்சி சார்பில்
நியமிக்கப்பட்டுள்ள புகைப்பட கலைஞர் மூலமாக தொண்டர்களுக்கு புகைப்படம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அப்போது கட்சியின் தொண்டர் ஒருவர் தனது செல்போனில் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வதை படம் பிடித்தார். அதைப் பார்த்து டென்ஷன் அடைந்த பிரேமலதா விஜயகாந்த் செல்போனில் படம் பிடிப்பதை நிறுத்த சொல்லி கட்சித் தொண்டரை எச்சரித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.