தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் பணத்தை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார்.
தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் உள்ள சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன் பின்னர் இரண்டு மாதத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் பல்வேறு சன்னதிகளில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹம்சன், உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ், மேற்பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை காணிக்கை பணத்தை எண்ணியபோது மூதாட்டி ஒருவர் பணத்தை திருடியுள்ளார், இதை கோயில் ஊழியர் வீரமணி என்பவர் பார்த்து அந்த மூதாட்டியை பிடித்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். ,இதுகுறித்து செயல் அலுவலர் சத்தியராஜ் மேற்கு போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேசியன் மற்றும் போலீசார் பெரிய கோயிலுக்கு விரைந்து வந்து அந்த மூதாட்டியை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி திருவரங்கம் பகுதியை சேர்ந்த போஸ் என்பவரின் மனைவி இந்திரா (60) என்பதும், உண்டியல் காணிக்கை பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்து 783 ஐ திருடியதும் தெரியவந்தது. .தொடர்ந்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி இந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.