கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும், தேனி, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கேரளாவிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தில் காலை 10 மணிக்குள்ளாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, நீலகிரி , கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.