தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று நடந்த இயந்திர கருவிகள் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அரசின் உழைப்பால், தொழில்துறையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்களில் சிலவற்றை சொல்கிறேன்.
* இந்தியாவின் உற்பத்தி துறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 விழுக்காடு.
* மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.
* ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில், இரண்டாவது இடம்.
* இந்திய அளவில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உற்பத்தியில் 17.66 விழுக்காட்டோடு 2ம் இடம்.
* தமிழ்நாட்டில் தொழில்முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு.
* இந்தியாவில் இருக்கும் 14 லட்சத்து 90 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர், அதாவது 42 விழுக்காடு பெண்கள், தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில்தான் பணிபுரிகிறார்கள்.
* 2024-25ம் ஆண்டில், 30.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்த இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்திருக்கிறோம்.
* ஏற்றுமதியில் முதல் 4 மாநிலங்களில், 2021-22ம் ஆண்டில் இருந்து, தொடர்ந்து ஏற்றுமதி மதிப்பு அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தொழில் வளர்ச்சிக்கும், தொழில் துறையினருக்கும் – தொழிலாளர்களின் நலனுக்கும் என்னவெல்லாம் தேவை என்று உன்னிப்பாக கவனித்து செயல்படுவதால்தான், இதெல்லாம் சாத்தியமானது.
* பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 59,915 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.2 ஆயிரத்து 31 கோடி மானியத்துடன் ரூ.5,209 கோடியே 51 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை மற்றும் மதுரை வசதியாக்கல் குழுக்களை இரண்டாக பிரித்து, புதிதாக வேலூர் மற்றும் தூத்துக்குடி வசதியாக்கல் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக 794 எம்எஸ்எம்இ-க்களுக்கு வரவேண்டிய ரூ.127 கோடியே 3 லட்சம் நிலுவைத்தொகை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கென குறிப்பான கடன் உத்தரவாத திட்டத்தை 2022ல் நான் தொடங்கி வைத்தேன். அதன்மூலமாக இதுவரைக்கும் 42 ஆயிரத்து 278 எம்எஸ்எம்இ-க்களுக்கு ரூ.7,578 கோடியே 53 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காக ரூ.607 கோடியே 63 லட்சம் கூடுதல் மானியமாக வழங்கியிருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, தென்னை நார் தொழில் கொள்கை – தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் – ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை என்று அனைத்து தொழில்களையும் கவனம் செலுத்தி முன்மாதிரி முயற்சிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் எம்எஸ்எம்இ-களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் இந்த துறைக்கு ரூ.1,918 கோடியே 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில், ரூ.3,617 கோடியே 62 லட்சம் தான் ஒதுக்கினார்கள். ஆனால், நம்முடைய அரசில், அதைவிட இரண்டு மடங்காக இப்போது வரைக்கும் ரூ.6,626 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பை வழங்கி, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். அதற்கு உங்களுக்கு துணையாக நம்முடைய திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் எம்எஸ்எம்இ-களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் இந்த துறைக்கு ரூ.1,918 கோடியே 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.3,617 கோடியே 62 லட்சம் தான் ஒதுக்கினார்கள். நம்முடைய அரசில், அதைவிட இரண்டு மடங்காக இப்போது வரைக்கும் ரூ.6,626 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறோம்.
* தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பை வழங்கி, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும்.