Skip to content

திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

சர்வதேச யோகா தினம் “ஒரே பூமிக்கு யோகா, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளுடன் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.
இதனை முன்னிட்டு மத்திய மண்டல அஞ்சல் துறை திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் வடிகால் பகுதியில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி நடைபெற்றது. இந்த சிறப்பு யோகாசன பயிற்சியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை அனுமதியுடன் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி துவங்கி வைத்தார். நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளர்கள் இந்த சிறப்பு யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு யோகாசன பயிற்சியினை விவேகானந்தா யோகா மையம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டாக்டர் திருநிறைச்செல்வி மற்றும் குழுவினர் பயிற்றுவித்தனர். மேலும் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் கோட்டங்களிலும் உள்ள அனைத்து தபால் அலுவலகங்கள், ரயில்வே தபால் அலுவலகங்கள் மற்றும் கிளை தபால் அலுவலகங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளர்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு யோகாசன பயிற்சியில் மண்டல அலுவலகம், திருச்சி அஞ்சல் கோட்டம், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டம் மற்றும் ரயில்வே அஞ்சல் கோட்டம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்கள், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள், தபால் அதிகாரிகள், எழுத்தர்கள், தபால்காரர்கள் மற்றும் பன்முக திறன் பணியார்கள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் திருச்சி மண்டல அலுவலக உதவி இயக்குனர் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

error: Content is protected !!