சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல் வரலாற்றில் ஒரு சில தலைவர்கள் சில காலங்களே அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் ஆற்றிய பணி என்றென்றும் நிலைத்திருக்கும். அப்படி சமமற்று கரடுமுரடாக கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்திய மகத்தான தலைவர் வி.பி.சிங். எளிய மக்கள்இன் மிது அக்கறையும், சமூக நீதி எண்ணங்களும் கொண்ட வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர். நாட்டின் பிரதமராக வெறும் 11 மாதங்கள் இந்தியாவை ஆட்சி செய்த வி.பி.சிங் ‘இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங்’ என்ற பெயரை பெற்றார்.
குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத நபராக திகழ்ந்த வி.பி.சிங்கின் பிறந்தநாள் இன்று. இந்நாளில் அவரது புகழை நாளும் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.