கர்நாடக மாநிலத்தில் பாராசிட்டமால் 650 உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தரப்பரிசோதனையில் இவை அனைத்தும் உரியத் தரத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே மருத்துவர் ஆலோசனை உடனேயே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் பெரும்பாலானோர் மருத்துவர் ஆலோசனை இல்லாமலேயே பலரும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். மருந்தகத்தில் சொல்வதைக் கேட்டும் பலரும் மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால், இதுபோல நிச்சயம் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒருவர் நிச்சயம் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பாராசிட்டமால் உட்பட பல மாத்திரைகளை நாம் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் எடுத்துக் கொள்வது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கர்நாடகாவில் போதிய தரத்தில் இல்லை என கண்டறியப்பட்ட 15 மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மாநில மருந்து பரிசோதனைக் கூடத்தின் ஆய்வில், இந்த பொருட்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தினார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இந்த மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தரச் சோதனையில் தோல்வியடைந்துள்ளன. அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் உடனடியாக இவற்றை விற்பனை செய்வது, பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். உங்களிடம் கையிருப்பு இருந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் இது குறித்துத் தெரிவிக்கவும். விதியை மீறி இதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மருத்துவ நிறுவனங்கள் உடனடியாக இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் கையிருப்பில் இருந்தால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எந்த மருந்துகள் எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த அனைத்து விவரங்களையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பாராசிட்டமால், அயர்ன் சுக்ரோஸ் இன்ஜெக்ஷன் உட்பட 15 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த மருந்துகளில் எந்த பேட்ச் பரிசோதனை செய்யப்பட்டன என்பது உட்பட விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.